நுண்கடன் நிதி திட்டத்தால் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது. இதனால் கீழ் மட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரமிட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
பிரமிட் முறைமை ஆசிய வலயத்துக்குட்பட்ட சிங்கப்பூர் நாட்டில் முதலாவதாக பிரமிட் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற போது 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரமிட் கொடுக்கல் முறைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு,அந்த முறைமைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரமிட் கொடுக்கல் வாங்கல் மலேசியாவுக்கு சென்றது, அங்கும் தடை விதிக்கப்பட்டதன் பின்னர் தற்போது இலங்கையில் இந்த முறைமை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
பிரமிட் கொடுக்கல் வாங்கல் முறைமை தொடர்பில் மத்திய வங்கி பல முறை அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.